Ali Sabry takes oaths as new Justice Minister of
Democratic Socialist Republic of Sri Lanka
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நீதி அமைச்சராக அலிசப்ரி என்கின்ற முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின்பு.......
- அடுத்த மாத நடுப்பகுதியில் அரசியல் யாப்பு திருத்தம் : நீதி அமைச்சர் அலி சப்றி தெரிவிப்பு
- இனவாதிகளின் எதிர்ப்புக்கும் மத்தியில் நீதி அமைச்சராக அலிசப்ரி என்கின்ற முஸ்லிம் ஒருவர்...
- கதிர்காமரை தமிழருக்கெதிராக பாவித்தது போன்று.....!
- அலிசப்ரியை முஸ்லிம்களுக்கெதிராக பயன்படுத்துவார்களா?
- முஸ்லிம்களுக்கென்று விசேடமாக இருக்கின்ற தனியார் சட்டத்தை நீக்குவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற சதித்திட்டமா?
- பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அலிசப்ரி அவர்கள் துணைபோவாரா ?
முகவரியே இல்லாத லக்ஸ்மன் கதிர்காமரை சந்திரிக்கா அரசு கொண்டுவந்தற்கு பின்னால் பல திட்டங்கள் இருந்தது.
(முகம்மத் இக்பால், சாய்ந்தமருது)
Read more....
"" அடுத்த மாத நடுப்பகுதியில் அரசியல் யாப்பு திருத்தம் : நீதி அமைச்சர் அலி சப்றி தெரிவிப்பு (எஸ் ஜே புஹாது) இலங்கை அரசியல் யாப்பின் தற்போது அமுலில் உள்ள 19வது திருத்தச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக 20வது திருத்தச் சட்டம் அடுத்த மாத நடுப் பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான செயற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டதும் அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக அது விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். 19வது திருத்தத்தில் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான ஏற்பாடுகள் இருப்பின் அவற்றை நீக்கிவிட்டு அவற்றுக்குப் பதிலாக புதிய திருத்தங்களைக் கொண்டு வருவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
புதிய திருத்தங்களின் படி
- ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாகவே இருக்கும்,
- ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிட முடியாது என்ற நிலையும் தொடரும்,
- அதேபோல் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளிலும் மாற்றம் இருக்காது
என்று அலி சப்றி மேலும் தெரிவித்துள்ளார். ""
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை இலகுவில் மறந்திருக்கமாட்டீர்கள். தமிழரான இவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டார்.
1994 இல் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரை சந்திரிக்கா அரசாங்கம் நன்றாக பயன்படுத்தியது.
இதுபோலவே இன்று ராஜபக்சாக்களின் அரசாங்கத்தினால் அலிசப்ரி அவர்கள் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கி நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லக்ஸ்மன் கதிர்காமர், அலிசப்ரி ஆகிய இருவருக்கும் பொதுவான சில ஒற்றுமைகள் உள்ளன. அதாவது இருவரும் சிறுபான்மை இனத்தவர்கள். அத்துடன் தேர்தலில் போட்டியிட்டு தங்களது சமூகத்தின் வாக்குகளால் வெற்றிபெறுவதற்குரிய அரசியல் தளம் இல்லாதவர்கள்.
சட்டத்தரணிகளான இவர்கள் இருவரும் தூங்கும்போது ஆங்கிலத்திலேயே கனவு காண்பவர்கள். அதாவது தங்களது தாய்மொழியில் அதீத பற்றுதல் இல்லாதவர்கள்.
வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு பொருத்தமான எத்தனையோ சிங்கள ராஜதந்திரிகள் இருக்கத்தக்கதாக முகவரியே இல்லாத லக்ஸ்மன் கதிர்காமரை சந்திரிக்கா அரசு கொண்டுவந்தற்கு பின்னால் பல திட்டங்கள் இருந்தது.
அதாவது அப்போது விடுதலை புலிகள் இராணுவரீதியில் மிகவும் பலமாக இருந்ததுடன், ஐரோப்பா உற்பட சர்வதேச நாடுகளில் புலிகளின் வலைப்பின்னல்கள் விரிந்து காணப்பட்டது.
“சிங்கள அரசாங்கம் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து தமிழர்களை கொலை செய்கிறது” என்ற புலிகளின் பிரச்சாரம் அப்போது மேற்கு நாடுகளில் மேலோங்கியிருந்தது. இந்த பிரச்சாரத்தை முறியடித்து விடுதலை புலிகளை தடைசெய்வதற்கு சிங்களவரைவிட தமிழரே பொருத்தமானவராக இருந்தார்.
அத்துடன் புலிகளை இராணுவரீதியில் அழிப்பதற்கு முடியாமல் இருந்த சந்திரிக்கா அரசு, மேற்கத்தேய நாடுகளில் புலிகளுக்காக பணம் வசூலிக்கப்படுவதனை கட்டுப்படுத்துவதன் மூலம் இங்கே புலிகளை பலயீனப்படுத்தலாம் என்று திட்டமிட்டது.
லக்ஸ்மன் கதிர்காமர் அவர்கள் தனக்கு பதவி வழங்கிய எஜமானர்களுக்காக ஓயாது ஓடியோடி உழைத்தார். இவரது ராஜதந்திர முயற்சி வெற்றியளித்தது. ஐரோப்பிய நாடுகள் புலிகளை பயங்கரவாத இயக்கமென்று தடை செய்தது.
இறுதியில் புலிகளினால் தமிழின துரோகியாக சித்தரிக்கப்பட்டு 2005 இல் அவரது இல்லத்தில் புலிகளின் ஸ்னைப்பர் தாக்குதல் மூலம் கதிர்காமர் கொலை செய்யப்பட்டார்.
அதுபோல் எத்தனையோ சிங்கள சட்ட மேதைகள் இருக்கத்தக்கதாக இனவாதிகளின் எதிர்ப்புக்கும் மத்தியில் நீதி அமைச்சராக அலிசப்ரி என்கின்ற முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின்பு “உள்நாட்டிலோ சர்வதேசத்திலோ எந்த எதிர்ப்பு வந்தாலும் பத்தொன்பதாவது சட்டத்தை திருத்தபோகிறேன்” என்று கருத்து வெளியிட்டதானது சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.
இங்கே “உள்நாட்டில்” என்று யாரை குறிப்பிடுகின்றார் ? பத்தொன்பதாவது அரசியலமைப்பு சர்வாதிகார ஆட்சிக்கு எதிரானதாகவும், சிறுபான்மையினர்களுக்கு சற்று ஆறுதலாகவும் இருக்கின்றது. இதனை மாற்றுவதென்றால் எதை மாற்றப்போகின்றார் ?
“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்பது முஸ்லிம்களுக்கென்று விசேடமாக இருக்கின்ற தனியார் சட்டத்தை நீக்குவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற சதித்திட்டமாகும். இதற்கு சர்வதேசத்தின் எதிர்ப்புக்களை சமாளிக்கும்பொருட்டு அன்று தமிழர்களுக்கு எதிராக லக்ஸ்மன் கதிர்காமர் பயன்படுத்தப்பட்டதுபோல இன்று முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்களை நீதி அமைச்சர் அலிசப்ரி அவர்கள் மேற்கொள்வாரா ?
அதாவது எங்களது கண்ணில் எங்களது கையாலேயே குத்துவதற்கான பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அலிசப்ரி அவர்கள் துணைபோவாரா ? பொறுத்திருந்து பார்ப்போம்.



Comments
Post a Comment